ரிஷ்யசிருங்கள் வேள்வித்தீயில் ஆகுதி விட, நெய்யை உண்டு எரியும் தீயில் சூரியனைப் போல் பிரகாசத்துடன் கூடிய ஒரு தேவகுமாரன் ஒருவன் கையில் பாயசம் நிரம்பிய ஒரு பாத்திரத்துடன் தோன்றி அப்பாத்திரத்தை தசரத மன்னனிடம் தந்து, பாயசத்தை அவன் மனைவியருக்குக் கொடுக்கும் படியாகவும் பாயசத்தை உண்டபின்னர் அவர்களுக்குப் புத்திர சந்தானம் ஏற்படும் எனவும் அருளினான். அளவிலா மகிழ்ச்சியுடன் பாத்திரத்தைப் பெற்ற தசரதன் அதனைத் தன் மனைவியரிடம் தர, அதனை பயபக்தியுடன் வாங்கிப் பருகி உரிய காலத்தில் கருத்தரித்தனர்.
காலக்கிரமத்தில் கோசலை ஸ்ரீராமனை மகனாகப் பெற்றாள். அடுத்து கைகேயி பரதனைப் பெற்றாள். சுமத்திரை இரட்டையர்களாக லக்ஷ்மணனையும் சத்துருக்கனனையும் பெற்றாள். நான்கு குமாரர்களும் உரிய காலத்தில் குல குருவான வசிஷ்டரிடம் கல்வி பயின்றதுடன் அரச குமாரர்களுக்குரிய ஏனைய பயிற்சிகளையும் பெற்றனர். நான்கு புத்திரர்களுடன் தசரத மன்னன் தேவர்களால் சூழப்பட்ட நான்முகக் கடவுளைப் போல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் மன்னன் தன் மந்திரிமார்களுடன் அரச குமாரர்களுக்கு விவாஹம் செய்வதைப் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கையில் மன்னனைக் காண விஸ்வாமித்திர முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று வணங்கி உபசரித்த தசரதன் அவருக்குத் தன்னால் என்ன உதவி செய்ய இயலுமென வினவினான். அவர் வேண்டிய உதவியைத் தவறாமல் செய்வதாகவும் வாக்களித்தான்.
மன்னனது உபசரிப்பில் மகிழ்ந்து அவன் தனக்கு உதவுவதாக வாக்களித்ததற்கு நன்றி கூறி விஸ்வாமித்திரர் கூறலானார். "மன்னா, நியமம் பூண்டு நான் ஆரம்பித்து நடத்தும் வேள்வி முடியும் தருவாயில் மாரீசன், சுபாஹூ எனும் அரக்கர்கள் இருவர் வேள்வித்தீயில் மாமிசமும் ரத்தமும் பொழிந்து வேள்வியைக் கெடுத்து வருகின்றனர். தேகபலமும் வீரியமும் யுத்தப் பயிற்சியும் பெற்ற அவர்களை நானும் மற்ற மகரிஷிகளும் சாபமிட்டு அடக்க முடியும் ஆனால் அதனால் தவம் வீணாகும். எனவே அவ்வரக்கர்களை அழித்து யாகத்தைக் காக்க உனது மூத்த மகனான இராமனை என்னுடன் அனுப்பித் தருவாயாக. அவனது வீரத்தால் எங்களது கஷ்டம் நீங்குவதுடன் என்னுடைய பாதுகாப்பின் அவனது வீரமும் பலமும் பெருகி இவ்வரக்கர்களை அழித்துப் பெரும் புகழ் பெறுவான். நான் கேட்டதற்கு முன்பே நீ எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி ஸ்ரீராமனை என்னுடன் அனுப்பித் தருவீராகில் மூவுலகத்திலும் பெரும் புகழடைவாய்." என்று கேட்டார்.
முனிவர் வருகையால் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த தசரதன் அவர் தன் உயிரிலும் மேலான ராமனைத் தன்னை விட்டுப் பிரித்து அழைத்துச் செல்ல விரும்புவதைக் கேட்டதும் பெரும் கவலையில் ஆழ்ந்தான். அருமைப் புத்திரனை அரக்கர்களுக்குப் பலி கொடுக்க நேருமோ என அஞ்சினான். எனவே பெரிதும் தயக்கத்துடன் முனிவரைப் பார்த்து, "பதினாறு வயது பூர்த்தியாகத
ராமன் ராக்ஷசர்களோடு யுத்தம் புரிந்து வெல்வானா என எனக்கு சந்தேகமாக உள்ளது. தங்களது வேள்வியைப் பாதுகாக்க நான் எனது படையுடன் வருகிறேன். அரக்கர்கள் மாயாவிகள். அவர்கள் புரியும் சூதும் வாதும் நிறைந்த மாய யுத்தத்தில் எதிர்நின்று போரிடும் வலிமையை ராமன் அடைந்திருப்பான் என நான் எண்ணவில்லை." என்று மறுத்துப் பேசினான்.
விஸ்வாமித்திரர் மீண்டும் மாரீசன், சுபாஹூ ஆகியவர்களைப் பற்றியும் அவர்களது எஜமான் இராவணனைப் பற்றியும் எடுத்துக் கூறி அவர்களை வெல்லக்கூடியவன் உலகில் ஸ்ரீராமன் ஒருவனே எனத் தெரிவித்து அவனைத் தன்னுடன் அனுப்ப வேண்டினார். புத்திரனைப் பிரிய மனமில்லாத தசரதன் மீண்டும், "தவமிருந்து பெற்ற என் மகன் ராமனைப் பிரிந்தான் என் உயிர் போய் விடும். வேண்டுமானால் நான் உங்களுடன் வருகிறேன்." என்று மறுத்துப் பேசவே பெருங்கோபம் கொண்ட
விஸ்வாமித்திர முனிவர், "மன்னா, முதலில் நான் வேண்டுவனவெல்லாம் தருகிறேன் என வாக்களித்து விட்டுப் பின்னர் அதை மறுத்துப் பேசுவது முறையல்ல. இத்தகைய நடவடிக்கை நீ பிறந்த இஷ்வாகு குலத்துக்குத் தகாது. இதுவே உன் முடிவாயின் நான் வந்த வழியே திரும்புகிறேன். வாக்குத் தவறியவன் என்ற பழிச்சொல்லுடன் நீ வாழ்வாயாக!" என்று கூறிவிட்டுத் திரும்ப யத்தனித்தார்.
.